search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மழை"

    • கனமழை காரணமாக தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
    • கோபி அருகே உள்ள அரசூர், தட்டான் புதூர் தரைப்பாலம் பலத்த மழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், கொடுமுடி, கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய கனமழை தொடர்ந்து பெய்தது.

    கோபிசெட்டிபாளையம், கூகலூர், தாழைக்கொம்பு புதூர், சமைதாங்கி, குளத்துகடை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் 80 மில்லி மீட்டர் மழைப்பதிவானது.

    கனமழை காரணமாக தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளுக்குள் 3 அடி உயரத்துக்கு புகுந்ததால் வீடுகளில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.

    தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு சென்றனர். இரவு நேரத்தில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வீட்டில் உள்ள பொருட்களை மேல் பகுதியில் பத்திரமாக வைத்தனர். இன்று காலை வரை மழை நீர் சூழ்ந்திருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்து இருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. மழை பெய்யும் போதெல்லாம் இந்த பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுவது தொடர் கதையாகி வருவது.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை கொம்பு புதூரில் ஒன்று திரண்டு அந்த வழியாக சென்ற அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் மற்றும் தாசில்தார் உத்தர சாமி மற்றும் வருவாய் துறையினர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.

    அப்போது பல ஆண்டுகாலமாக மழை நீர் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாகவே பள்ளத்தை சென்றடைந்து வந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் தடுப்பு சுவர் அமைத்ததால் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் 50 வீடுகளில் புகுந்தது தெரியவந்தது.

    கோபி அருகே உள்ள அரசூர், தட்டான் புதூர் தரைப்பாலம் பலத்த மழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அப்போது மக்கள் 6 கிலோமீட்டர் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.

    பலத்த மழை எதிரொலியாக கொடிவேரி அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை இருபுறங்களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கொடிவேரி தடுப்பணை பகுதியில் 1,600 கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    • பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவில் 3 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
    • பவானிசாகர், கொடிவேரி, வரட்டுபள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக மழை பொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று காலையும் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு 10 மணிக்கு பிறகு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12 மணி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஈரோடு மாநகர் பகுதியில் அன்னை சத்யா நகர், மல்லி நகரின் மையப்பகுதியில் பிச்சைக்கார பள்ளம் ஓடை செல்கிறது. இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மழை பெய்யும் போதெல்லாம் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த மழை நீர் வீடுகளுக்குள் புகுவது தொடக்கதையாகி வருகிறது.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் இந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஓடைகளில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் மீண்டும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த மழை நீர் அருகே இருந்த அன்னை சத்யா நகர் மற்றும் மல்லி நகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் தரைத்தளத்தில் உள்ள மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை மேல் தளத்திற்கு எடுத்து சென்றனர். மாணவ-மாணவிகளில் பாடப் புத்தகங்கள் மழை நீரில் நனைந்தது. மேலும் வீடுகளை சுற்றியும் மழைநீர் தேங்கி நின்றதால் அவர்களது இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது அன்னை சத்யா நகர், மல்லி நகர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை மக்கள் வாலியால் இறைத்து வெளியே ஊற்றினர்.

    தகவல் அறிந்ததும் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஓடைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சரி செய்து வருகின்றனர். மழைநீர் சூழ்ந்து இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.


    இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நசியனூர் அடுத்த சாமிகவுண்டன் பாளையம் பகுதிகளில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நீர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக நள்ளிரவு 2 மணி முதல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    கார், மோட்டார்சைக்கிள் போன்ற சிறியரக வாகனங்கள் மாற்று வழியில் சென்று வருகின்றன. சாமிகவுண்டன்பாளையம், பள்ளத்தூர், மலையம்பாளையம் போன்ற பகுதிகளில் உடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளத்தூர் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. அந்த பகுதியை சேர்ந்த ராணி என்பவர் வீடு மழையால் இடிந்து விழுந்தது. நல்ல வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    இதேபோல் பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவில் 3 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதேபோல் பவானிசாகர், கொடிவேரி, வரட்டுபள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    • அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, மீனவர் வீதி, பாரதியார் வீதி பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • அம்மாபேட்டை அருகே உள்ள கோம்பூர் நீரேற்று நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் 50 கிராமங்களுக்கு குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது.

    அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக நேற்று மாலை 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி ஆகிய பகுதிகள் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, மீனவர் வீதி, பாரதியார் வீதி பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அம்மாபேட்டை அருகே உள்ள கோம்பூர் நீரேற்று நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் 50 கிராமங்களுக்கு குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கருங்கல்பாளையம் பகுதியிலும் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து செல்கிறது. பவானி நகரம் காவிரி ஆற்று வெள்ளத்தால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையை தாண்டி தண்ணீர் செல்கிறது. மேலும் பவானி காவேரி வீதி, கந்தன்பட்டறை, பசுவேஸ்வரர் வீதி, பாலக்கரை வீதி, வெந்தலை படிக்கட்டு, கீழக்கரை வீதி உள்பட பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

    மேலும் பவானி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பவானி வாரச்சந்தை ரோடு பகுதியில் உள்ள எரிவாயு தகனமேடை பகுதியில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் செல்வதால் தகனமேடை மூடப்பட்டுள்ளது.

    தற்போது காவிரி ஆற்றுடன் பவானி ஆற்று நீரும் கலப்பதால் கூடுதுறை பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கரையோர பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் கொடுமுடி இலுப்பைத்தோப்பு, வடக்குத்தெரு, சத்திரப்பட்டி, காவேரி கரை, ராகவேந்திரா வீதி, வைராபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் 700 பேர் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளை உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    தீபாவளி பண்டிகை நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாததால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

    • தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி தோட்டம் குளம் போல மாறியது.
    • இடைவிடாமல் தினமும் மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி செடிகள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக தாளவாடி, சத்தியமங்கலம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

    மழை காரணமாக வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் அடிக்கடி தாளவாடி பகுதிகளில் உள்ள தரைமட்ட பாலத்தை முழ்கியபடி செல்கிறது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், பவானி சென்னிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் காடக நல்லி பகுதியில் உள்ள சிக்கூர், பெரிய உள்ளேபாளையம், சின்ன உள்ளே பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பீன்ஸ், உருளை கிழங்கு, வெள்ளைபூண்டு, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர்.

    தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த தோட்டங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி தோட்டம் குளம் போல மாறியது. மேலும் இடைவிடாமல் தினமும் மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி செடிகள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தண்ணீர் வடிய வழியில்லாமல் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள காய்கறி செடிகள் அழுகி வருகிறது. எனவே வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயிர் சேதங்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-12, பெருந்துறை-53,கோபி செட்டிபாளையம்-46, தாளவாடி-8.3, சத்தியமங்கலம்-2, பவானிசாகர்-4, பவானி-8.4, நம்பியூர்-7, சென்னிமலை-50, மொடக்குறிச்சி-11, கவுந்தப்பாடி-4.6, எலந்த குட்டை மேடு-11.2, கொடிவேரி-6, குண்டேரி பள்ளம்-4.2, வரட்டுப்பள்ளம்-5, மாவட்டம் முழுவதும் மொத்தம் 232.7 மி.மீ. மழை பெய்தது.

    • கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
    • குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பெரியவர்கள், குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. அனல் காற்று அதிக அளவில் இருந்ததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.

    இந்நிலையில் மாலை 5:45 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. இதைத்தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 20 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    இதேபோல் கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 24 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபி -24, ஈரோடு -19, நம்பியூர் -14, கவுந்தப்பாடி -10.20, பெருந்துறை -8, குண்டேரிபள்ளம் -6, பவானிசாகர் -2.

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு செய்யும் இடத்தில் மழைநீர் புகுந்தது.
    • இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறாவளியுடன் விடிய, விடிய மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேப்போல் மின்கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தன. இதனால் மின் தடையும் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் 3-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணிக்கு பிறகு மாநகர் பகுதியில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.

    சுமார் 1½ மணி நேரம் பெய்த பலத்த மழையால் மாநகர் பகுதி முழுவதும் வெள்ள காடானது. ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    பல்வேறு இடங்களில் தற்போது திட்ட பணிகள் நடந்து வருவதால் அதற்காக தோண்டப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு செய்யும் இடத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளித்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இங்கு லேசான மழை பெய்தாலே சேறும் சகதியுமாக காட்சி அளிப்பது தொடர்கதையாகி வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேபோல் கவுந்தபாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 63.8. மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி வழிகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வரட்டுப்பள்ளம்-63.8, ஈரோடு-46, கவுந்தப்பாடி-44.20, பவானிசாகர்-14.4, பெருந்துறை-10, தாள வாடி-3, சென்னிமலை, கோபி-1.

    ×